Lead NewsLocal

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய களமிறங்கினால் மஹிந்தவுக்கு சாவுமணிதான்! – அடித்துக் கூறுகின்றார் குமார வெல்கம

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளைப் பங்காளிக் கட்சிகளாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டால் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணமும் முடிவுக்கு வந்துவிடும்.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

“தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இனிமேல் ஜனாதிபதியாக வருவதற்குத் தகுதியற்றவர். பொருத்தமான – வெற்றியை உறுதி செய்யக்கூடிய – நாட்டு மக்களின் மனதை வெல்லக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச களமிறக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதியுபதி வேட்பாளராக கோட்டாபயவைக் களமிறக்க மஹிந்த முடிவெடுத்துள்ளார் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உண்மையில் கோட்டாபய களமிறங்கினால் படுதோல்வியைச் சந்திப்பார். தமிழ் – முஸ்லிம் மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். சிங்கள மக்களிலும் 60 வீதமானோர் அவரை எதிர்ப்பார்கள்.

எனவே, மஹிந்த தனது முடிவை மாற்றியமைக்க வேண்டும். இல்லையேல் மஹிந்தவின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிடும்.

ராஜபக்ச குடும்பத்தில் மஹிந்தவே நல்லவர்; நேர்மையானவர். ஏனையவர்கள் ஊழல், மோசடிகள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர்கள்.

இப்படியானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் முழு நாடும் கொதிப்படையும்.

மஹிந்தவின் நல்ல குணத்துக்கு அவர்தான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் ஆனால், நாட்டின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் அவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகல பங்காளிக் கட்சிகளும் ஒன்றுகூடி பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்ய வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading