வாட்டி வதைக்கின்றது வறட்சி! மூன்று இலட்சம் பேர் பாதிப்பு!!
இலங்கையின் 17 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது என இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கடும் வறட்சி நிலவுகின்றது.
இதன் காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 960 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 673 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் வறட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றியுள்ளதுடன், மேய்ச்சல் தரைகளும் கருகிப்யேுள்ளன என்று கால்நடை வளர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வறட்சி காரணமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 769 குடும்பங்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 41 பேரும், மன்னார் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 324 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12ஆயிரத்து 770 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து 107 பேரும், அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் 16 ஆயிரத்து 382 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 479 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

