Local

இஸ்லாமிய தொலைக்காட்சிக்கு இலங்கையில் தடை!

இலங்கையில் கேபிள் வழியாக ஒளிபரப்பப்படும் பிரபல இஸ்லாமிய தொலைக்காட்சி சேனலான பீஸ் டிவியின் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தின்போது, பீஸ் டிவியின் ஒளிபரப்பை தடை செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்டதாக எழுத்துமூலம், தொலைபேசி மூலம் மற்றும் வாய்மூலம் பல்வேறு தகவல்கள் கிடைத்திருந்த நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிபிசியின் சிங்கள சேவை செய்தியாளர் அஸாம் அமீன் தம் ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார்.

இந்தியாவிலும் இந்த தொலைக்காட்சி முன்னமே தடை செய்யப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டயலோக் மற்றும் பியோ ஆகிய வலையமைப்புக்களிலேயே இந்த பீஸ் டிவி ஒளிபரப்பப்பட்டுள்ளதுடன், இந்த தடை தீர்மானம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம் குறித்த நிறுவனங்களுக்கு வெகுஜன ஊடக அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பீஸ் டிவியின் ஒளிபரப்பு இலங்கையில் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

பீஸ் டிவி குறித்து தொடர்ந்தும் புகார்கள் கிடைக்கும் பட்சத்தில், அந்த தொலைக்காட்சி சேவையை வேறு வழிகளில் பார்வையிடுவதனையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, பீஸ் டிவியின் நிகழ்ச்சிகளும் காரணமாக அமைந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading